பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் கூத்தப்பாக்கம் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட தனியார்ப் பள்ளியை அப்புறப்படுத்த 2024-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி வருவாய்த்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட 8 அதிகாரிகளுக்கு எதிராக,
பாஜக ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் வினோத் ராகேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மாற்று நம்பிக்கை உடையவர்களுக்குக் கோயிலின் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்றும்,
நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் வரும் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.