பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சீனாவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வழங்கியுள்ள நிலையில், இந்தியாவும் விமானப்படையை நவீனமயமாக்கி வருகிறது. அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஆறு தேஜஸ் MK 1A இலகுரக போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போர் விமானம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் விமானப்படையின் முதுகெலும்பாக அமெரிக்காவின் F-16 போர் விமானம் உள்ளது. F-16 ஒரு வலுவான போர் விமானமாக இருந்தாலும், பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களில் பல பழைய மாடலாக உள்ளன. சீனாவும் பாகிஸ்தானுக்கு ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கத் தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் F-35, ரஷ்யாவின் Su-57E போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா ஆராய்ந்து வரும் நிலையில், HAL மற்றும் DRDO உடன் இணைந்து முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, தேஜஸ் போர் விமானங்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
தேஜஸ்- இது அச்சுறுத்தல் மிக்க எத்தகைய வான் சூழல்களிலும் இயங்கும் திறன் கொண்ட ஒற்றை எஞ்சின் கொண்ட பல பணிகளை மேற்கொள்ளக்கூடிய போர் விமானமாகும். இது வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் துல்லிய தாக்குதல் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உருவாக்கிய தேஜஸ் Mk1, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அதிநவீன போர் விமானமாகும். 2015-ம் ஆண்டு முதல் தேஜஸ் MK1 போர் விமானம், இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில், 48,000 கோடி ரூபாய்க்கு 83 Mk-1A போர் விமானங்களுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு, சுமார் 67,000 கோடி ரூபாய்க்கு கூடுதலாக 97 Mk-1A விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது. இது மட்டுமில்லாமல், மேம்பட்ட மல்டி-ரோல் தேஜஸ் Mk-2 போர் விமானக் கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவதுக்கும் 156 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 1.3 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த தேஜஸ் போர் விமான உற்பத்தியில் சுமார் 2,448 சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 6,300-க்கும் மேற்பட்ட இந்திய மூலப்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளது.
தேஜஸ் MK1A, 4.5 தலைமுறை பல்துறை போர் விமானமாகும். இதில், அதிநவீன Avionics, மின்னணு போர் விமான தொகுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் Active Electronically Scanned Array radar, அமைப்பைக் கொண்டுள்ளது. இது சிறந்த கண்காணிப்பு மற்றும் துல்லிய தாக்கும் திறனை வழங்குகிறது. இந்த போர் விமானத்தின் வேகம் மணிக்கு 2,222 கிலோமீட்டர் ஆகும்.
தேஜஸ் MK1A வானிலிருந்து வானுக்கும், வானில் இருந்து தரைக்கும் செலுத்தக் கூடிய அதிநவீன ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். Beyond Visual Range (BVR) ஏவுகணைகள் முதல் பிரம்மோஸ் வரை பல்வேறு ஏவுகணைகளையும் ஏந்தி செல்லும் வகையில் இந்த போர் விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான GE Aerospace நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட F404-IN20 எஞ்சின் தேஜஸ் MK1A போர் விமானத்தில் பயன்படுத்துகிறது. அடுத்த மாதம் சோதனை நடத்தப்பட்டு வரும் டிசம்பருக்குள் இந்திய விமானப்படைக்கு 12 தேஜஸ் MK1A போர் விமானங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் இரண்டு மற்றும் நாசிக்கில் ஒன்று என மூன்று பிரத்யேக உற்பத்தி ஆலைகள் மூலம், ஆண்டுதோறும் 24 தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2031ம் ஆண்டுக்குள் 180 தேஜஸ் Mk-1A போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரான்ஸின் ரஃபேல் மற்றும் அமெரிக்காவின் F-16 போர் விமானங்களை விட, இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் MK1A போர் விமானம் ஒரு சரியான மாற்று என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தேஜஸ் விமானங்களில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வசதி உள்ளது. அதே நேரத்தில் ரஃபேல் மற்றும் F-16 போர் விமானங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.