சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என சிட்டுக்குருவி படத்துடன் எம்.பி. சசிதரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பியாக உள்ளார். காங்கிரஸ் மேலிடத்திற்கும் சசிதரூருக்கும் இடையே சுமூக உறவு இல்லாமல் இருந்து வருகிறது.
அண்மை காலமாக பிரதமர் மோடியை சசிதரூர் புகழ்ந்து பேசி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததை சசிதரூர் புகழ்ந்திருந்தார். இதையடுத்து ஆப்ரேசன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க சென்ற 7 குழுவில், சசிதரூர் ஒரு குழுவை வழிநடத்த பிரதமர் வாய்ப்பு கொடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்ற சசிதரூர் தலைமையிலான குழு, ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாடுதான் முதலில் என்று கூறியதாகவும், ஆனால் சிலர் மோடிதான் முதலில் என்று கூறியதாகவும், சசிதரூரை விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் சிட்டுக்குருவியின் போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அதில் சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், வானம் யாருக்கும் சொந்தமில்லை எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் சசிதரூர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற தயாராகி விட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.