திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், பத்திர காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக அவரை திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசார் தாக்கி சித்திரவதை செய்ததால் அஜித்குமார் காவல்நிலையத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சம்பவம் குறித்து அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். அப்போது இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மடப்புரத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.