இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேல் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மன்னார் புரத்தில் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் முகாமை தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் செயல்பாடுகள் நேரடியாக மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் குறைதீர் வாகனம் தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளதாகக் கூறிய அவர், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.