இளைஞர் அஜித் படுகொலை, மாவட்டக் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. மூர்த்தி ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? என்று தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திமுக அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் அவர்களை, அவசர அவசரமாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது குறித்துக் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது மாண்புமிகு நீதிமன்றம்.
இளைஞர் அஜித் குமாரை, முதல் தகவல் அறிக்கை கூடப் பதியாமல், தனிப் படை எப்படி விசாரித்தது? ராமநாதபுரம் சரக காவல்துறை உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? அல்லது அவர்ககளுக்குத் தெரியாமல், தனிப்படை விசாரித்ததா? அப்படியானால், சரக காவல்துறை, உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இல்லையா? ஊராட்சித் தலைவரின் கணவரான திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன், திமுகவைச் சேர்ந்த மகேந்திரன், திருப்புவனம் திமுக நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோருடன், மானாமதுரை டிஎஸ்பியும் சேர்ந்து, உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் பேரம் பேச முற்பட்டது காவல்துறை உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமலா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மாவட்டக் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. மூர்த்தி ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்? இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா? இளைஞர் அஜித்குமாரை, சீருடை அணியாத சிலர், கடுமையாகத் தாக்கும் காணொளியைப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இனி காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இந்த வழக்கு தொடர்பாக, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி, சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியிருப்பதைப் போல, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். கண்துடைப்புக்காகப் பணிமாற்றம் செய்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.