13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் தளம் எங்கு உள்ளது? பார்க்கலாம் விரிவாக.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட கடும் மோதலை தொடர்ந்து,எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்சனைக்குரிய பிற இடங்களிலிருந்து படைகள் திரும்பப்பெறப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.
இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலும், சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாகவும் கிழக்கு லடாக்கில், ராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது இந்தியா… அதன் ஒருபகுதியாகச் சீனாவையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லாக்கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து வெறும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியோமாவில் புதிய விமானப்படைத் தளத்தை இந்தியா அமைத்து வருகிறது.
13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் 214 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த விமானப்படை தளம் அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள், அவசரக்கால மீட்பு விமானங்கள்,சரக்கு விமானங்களைக் கையாளும் வகையில், புதிய விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. 3 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்படுத்தப்பட்ட ஓடுபாதை அனைத்து வகை விமானங்களையும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலைகள் நிறைந்த,சாலைவசதிகள் அற்ற வடக்கு பகுதியை எளிதாகச் சென்றடையும் வகையில் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விமானப்படைத் தளம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் விரைவாக ராணுவ கட்டுமானங்களை ஏற்படுத்த முடியும் என்பதோடு, வடக்கில் உள்ள மாநிலங்களைச் சங்கிலி போல் இணைக்க விமானங்களையும் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் இந்தியா, சீனா இடையிலான ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு நியோமா விமானப்படைத் தளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.