திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர் , கொள்கை தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்பதாகத் தெரிவித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டார், அதில் அரசுத் திட்டங்களில் ஆளுங்கட்சியின் அடையாளத்தைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது வரவேற்கத்தக்க ஒன்று எனவும், திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது எனவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத் திட்டங்களில் ஸ்டாலின் என்று தனது பெயரை முதலமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார் எனவும் அரசுத் திட்டங்கள் என்பது மக்கள் நலனை மேம்படுத்துவதற்குத்தானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி மக்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்களிலிருந்து பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.