ஆண்டுக்கு நான்கு குழுக்களை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆண்டுக்கு நான்கு குழுக்களை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதில் ஒன்றுதான் சில மாதங்களுக்கு முன்பாக அமைத்த மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்த குழு. இந்தக் குழுக்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என, தமிழக மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வளர்ச்சி, வீக்கம் என நகைச்சுவை செய்திருக்கிறார் முதலமைச்சர். வழக்கமாக, துண்டுச்சீட்டைக் கையில் கொடுப்பவர்கள், ஒரு மாற்றாக, முகம் பார்க்கும் கண்ணாடியை முதல்வர் கையில் கொடுத்து விட்டார்கள்.
அதனால்தான், அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால், வீக்கமாகுமே தவிர அது வலிமையாகவோ, வளர்ச்சியாகவோ ஆகாது என்று முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.
இவரது குடும்பத்தில், இவர் முதலமைச்சர். இவரது மகன் துணை முதலமைச்சர். மருமகன் சூப்பர் முதலமைச்சர். தங்கையும், மற்றொரு மருமகனும் பாராளுமன்ற உறுப்பினர்கள். வீக்கத்தைப் பற்றிப் பேச, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை விடப் பொருத்தமானவர் வேறு யாராக இருக்க முடியும்? இந்தக் குடும்பத்தின் வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், அப்பாவி தமிழக மக்களே என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.