தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கம்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
போதிய வடிகால் வசதி ஏற்படுத்தாததுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மொத்த மழைநீரும் வயல்களில் குளம்போல் தேங்குவதுடன், வீடுகளையும் சூழ்ந்து கொள்வதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், கால்வாய் பகுதிகளை அரசு உடனடியாகத் தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.