2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையோடு சேர்ந்து தாமரை மலரும் என்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில், தி புக் ஆப் S.I.R. எனும் வாக்காளர் வலிமைப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், புத்தகத்தின் ஆசிரியரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், எஸ்ஐஆர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புத்தகத்தை இயற்றியிருப்பதாகக் கூறினார்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் என்றால் பதறி விடுவதாகக் கூறிய அவர், தமிழகத்திற்கு நல்லது நடக்கக் கூடாது என்று திமுக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு வேலைச் செய்வதாக விமர்சித்தார்.
பீகாரில் 65 லட்சம் மக்கள் நீக்கப்பட்டிருந்தால் எங்கே என் ஓட்டு என்று சாலைக்கு வந்து அவர்கள் கேட்டிருக்க மாட்டார்களா என்றும் அவர்க் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை என்று குறிப்பிட்ட அவர், வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சியை உருவாக்கியதுபோல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைத்து வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வரும் என உறுதியளித்தார்.
மேலும், பாஜக மதவாத கட்சியல்ல மனிதவாத கட்சி என்றும் தமிழிசைத் தெளிவுபடுத்தினார்.
			















