இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது பார்க்கும் பணி முடியாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்த 6 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இஸ்லாமாபாத்தால் இன்னும் சரி செய்ய முடியவில்லை. குறிப்பாக நூர்கான் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், ஆப்ரேசன் சிந்தூர் வலிமையை இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
Open source intelligence, சுருக்கமாக OSINT-ன் நிபுணர் டேமியன் சைமனின் கூற்றுகள், பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல்களால் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன… கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு அருகே இந்தியா தாக்கியதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.
அவரது பதிவுகளின்படி, இந்திய படைகளால் குறிவைக்கப்பட்ட ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை துவக்கியிருப்பதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன… வடக்கு சிந்து மாகாணதில் ஜகோபாபாத் விமானப்படை தளத்தில், போர் விமானங்களை நிறுத்துமிடத்தில் இந்தியா ஏவுகணைகளை வீசியிருந்த நிலையில், அங்குக் கூரைகள் அகற்றப்பட்டு, மறு கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
இந்திய ஏவுகணைகளால் பாகிஸ்தானின் முரித், ரஃபிகி, முஷாஃப், போலாரி, காத்ரிம், சியால்கோட், சுக்கூர் போன்ற 10 விமானப்படை தளங்கள் மிகக் கடுமையான சேதங்களை சந்தித்ததை விங் கமாண்டர் வியோமிகா சிங் கடந்த மே மாதம் உறுதிபடுத்தியிருந்தார். இதனைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் ஒப்புக்கொண்டிருந்தார்.
புவி நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும், Open Source Intelligence நிபுணருமான சைமன், இந்தியா – பாகிஸ்தான் பிராந்தியத்தில் போரின்போது ஏற்பட்ட சேத விவரங்கள், செயற்கைக் கோள் படங்கள், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் போன்ற காரணத்தால், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் நிலையில், அவரது தற்போதைய பதிவு, ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையிலிருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை என்பது அடிக்கோடிட்டு காட்டுகிறது.
















