நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் படையெடுத்தனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சில ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருட்களை பயன்படுத்தும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு இயற்கை விவசாயமே தீர்வு என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை சாத்தியமாக்கும் முயற்சியாகத்தான் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சி.
கோவை ‘கொடிசியா’ அரங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக கொடிசியா ஏ, பி அரங்குகளில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஸ்டால்கள் இடம்பெற்றன.
இயற்கை வேளாண் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை சுகந்தி என்ற பெண் தொழில் முனைவோர் உருவாக்கினார். “நாங்கள் தயாரிக்கும் வாழை நார் பொருட்களுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வாழை மட்டை நாரில் செய்யப்பட்ட எங்களது மாலையை பிரதமர் ஏற்றுகொண்டார்” எனக் கூறும் சுகந்தி, இது எங்களின் இத்தனை நாள் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இதுதவிர பாரம்பரிய நெல் வகைகளை ஒரே இடத்தில் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியது இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவையெல்லாம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட நெல் வகைகள்…. இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமனால் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன…
இயற்கை வேளாண் விவசாயத்தின் அடிப்படையே மண்தான்…. அந்த மண்ணை வளமாக்க ஒவ்வொரு குடிமகனும் தமது வீட்டில் குப்பைகளை உரமாக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்…. என்கிறார் மக்கும் குப்பைகளை உரமாக்கும் நடைமுறைகளை கேரளாவில் சாத்தியமாக்கி வரும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நான்சி… இவர் இந்த இயற்கை வேளாண் கண்காட்சியில் ஸ்டால் அமைத்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
கரும்பு, வாழை, காய்கறிகள், பயிர் வகைகள், உரங்கள், மண்ணை உயிர்ப்போடு வைக்கும் இயற்கை பூச்சி கொல்லி மருந்துகள் என இயற்கை வேளாண்மைக்கு உதவும் பல காரணிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. மருந்து தெளிக்க, நீர் பாய்ச்ச, பூச்சி கொல்லி தெளிக்க அதிக திறன் கொண்ட ட்ரோன், கால்நடை, மீன் வளர்ப்புகளுக்கு உதவும் தொழில் நுட்ப கருவிகள் என கண்காட்சியில் இடம்பெற்ற தொழில் நுட்ப கருவிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.
உணவை சரியானதாக உண்ணும் போது அதுவே மருந்தாக செயல்படுகிறது… ஆனால் ரசாயனம் கலந்த பூச்சி கொல்லி உரங்களால் உணவே நாளடைவில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் காரணியாக மாறி விடுகிறது. இந்த நிலையில்தான் இயற்கை வேளாண்மைக்கு மாறி, எதிர்கால தலைமுறைக்கு நல்ல உணவை சாத்தியப்படுத்த நம் விவசாயிகள் தயாராகி விட்டனர் என்பதையே இந்தக் கண்காட்சி பறைசாற்றியது.
















