கன்னியாகுமரியில் கிராம நிர்வாக அலுவலரை ஒருமையில் பேசியதாக ஆட்சியர் அறையை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை, ஆட்சியர் அழகு மீனா ஒருமையில் திட்டியும், அவரது கைபேசியை பறித்து அனைவரின் முன்பாகத் தூக்கி எறிந்து அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சக பெண் கிராம நிர்வாக ஊழியரை உருவ கேலி செய்ததாகவும் தெரிகிறது. இதனால் கோபமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்த நிலையில், நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டனர்.
















