இலங்கையில் டிட்வா புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த சூறாவளி காற்றால், இலங்கை கிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கொழும்பு, மட்டக்களப்பு உட்பட நாடு முழுவதும் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334ஆக உயர்ந்துள்ளது.
மாயமான 350க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவும் வகையில், நம் விமானப்படை விமானங்கள் மற்றும் கடற்படையின் கப்பல்கள் அந்நாட்டுக்கு விரைந்துள்ளன. ஆப்ரேஷன் சாகர் பந்து திட்டத்தின் வாயிலாக நம் விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், நமது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கண்டி பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலையோரம் உள்ள கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .
















