2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஒரு மாதிரி வாக்களிப்பார்கள். சட்டசபை தேர்தலில் வேறு மாதிரி வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகு கூட்டணியின் இரு கட்சிகளும் சேர்த்து வாங்கிய வாக்கு 41.33 சதவீதம் ஆகும். 84 சட்டசபை தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியுள்ளோம். 15 சட்டசபை தொகுதிகளில் 1 சதவீதம் அளவுக்குத்தான் வாக்கு குறைந்தது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என அவர் தெரிவித்தார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுக அழுத்தம் காரணமாக 28 மாதங்கள் கழித்து மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். மக்களிடம் செல்வாக்கை இழந்ததால், தற்போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அவர் கூறினார்.
தை பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த 2021 அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
திமுகவினர் மீதான ஊழல் பட்டியலிட்ட அவர், விரைவில் பல அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
















