இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் சமீப காலமாகப் பதற்றமான சூழல் நிலவிவந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரெனப் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது இரு நாடுகளின் உறவு மீண்டும் சூடுபிடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த கடுமையான சுங்க வரிகள் காரணமாக, இருநாட்டு உறவில் சமீப காலமாகப் பதற்றமான சூழல் நிலவி வந்தது. குறிப்பாகக் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்கா, இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீதான சுங்க வரியை 50 சதவீதமாக உயர்த்தியது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதை காரணம் காட்டி, ஏற்றுமதி வரியைக் கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு அதிகாரிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களும் இருநாடுகளுக்கிடையிலான நம்பிக்கையைச் சீர்குலைத்தன. இதன் காரணமாக டெல்லி – வாஷிங்டன் உறவில் தற்காலிக விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடியை “அமெரிக்காவின் சிறந்த நண்பர்” எனப் புகழ்ந்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் டிரம்ப், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவே அமெரிக்காவின் முக்கிய மூலோபாய கூட்டாளியென வர்ணித்துள்ளார்.
இந்தத் தகவலை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அண்மையில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் தாயகமாக விளங்கும் இந்தியா ஒரு அற்புதமான நாடு எனவும், இந்தோ – பசிபிக் பகுதியில் அமெரிக்காவுக்கான முக்கிய மூலோபாய கூட்டாளி இந்தியா என்றும் டிரம்ப் கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாராட்டு கடந்த வாரம் பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.
அந்த உரையாடலில் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வேகப்படுத்துவது குறித்து தலைவர்கள் இருவரும் விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன், இந்தியா – அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இரு நாடுகளின் பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து 2 நாட்கள் ஆலோசனை நடத்தினர். அதில் இந்தியா சார்பில் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த 50 சதவீத சுங்க வரியில் தளர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
முன்னதாக அதிபர் டிரம்ப் உடனான உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் விவரித்திருந்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமைக்காக இந்தியா – அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதில் பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சுகள் இருநாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தும் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. இதனையடுத்து இரு நாடுகளும் சமீப வாரங்களாகத் தங்கள் உறவை மீண்டும் வலுப்படுத்தும் “DAMAGE CONTROL” நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
மொத்தத்தில், சமீப காலமாகச் சுங்க வரிகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாகப் பதற்றமடைந்திருந்த இந்தியா – அமெரிக்கா உறவில், தற்போது மீண்டும் சமநிலையும், நெருக்கமும் உருவாகும் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலையில், வர்த்தக ஒத்துழைப்பு, மூலோபாய கூட்டாண்மை மற்றும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு செயல்பாடு ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் முக்கியத்துவம் அளிப்பது, எதிர்காலத்தில் உறவுகள் புதிய பாதையில் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
















