செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், செய்யாற்றில் இருந்து ஐந்து கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆற்றில் செயல்படும் கிணறுகளின் மோட்டார்கள் பழுதானதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும், ஊராட்சி செயலாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், செய்யாறு – வந்தவாசி சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















