அமைதிக்காக நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இஸ்ரேல் ஆறுதல் அமைதி பரிசை அறிவித்துள்ளது.
உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தி வரும் தனக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் டிரம்ப்பின் பெயரை பரிந்துரை செய்த நிலையிலும், அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை.
இந்நிலையில் மேற்காசிய நாடான இஸ்ரேலின் உயரிய குடிமகன் விருதான, இஸ்ரேல் பரிசு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அமைதி பிரிவில் முதன்முறையாக, இஸ்ரேல் அல்லாத ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நெதன்யாகு, பல மரபுகளை உடைத்து உலகை ஆச்சரியப்படுத்தியுள்ள டிரம்புக்கு, இஸ்ரேல் – யூத மக்களுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக விருது வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
அடுத்தாண்டு இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் அதிபர் டிரம்ப் இந்த விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
















