சபரிமலை ஐயப்பன் மகரவிளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது.
41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.
மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்கரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
அதனைத்தொடர்ந்து பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். அப்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தருவார்.
தொடர்ந்து புஷ்பாபிஷேக வழிபாடுகள் நடைபெறும். மகர விளக்கு பூஜையையொட்டி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே பக்தர்களின் பாதுகாப்பிற்காக சன்னிதானத்தில் ஐந்தாயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















