மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாட்டின் மிக பொறுப்புள்ள நிதித்துறை அமைச்சராக 6 ஆண்டுகள், 8 மாதங்களை நிறைவு செய்துள்ளார்.
முன்னதாக கடந்த 1950ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பதவியேற்ற மறைந்த முன்னாள் நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக், 6 ஆண்டுகள் 2 மாதங்களுக்கு பதவியில் நீடித்தாா்.
1951 மற்றும் 1956க்கு இடையில் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த தேஷ்முக், ஆறு முழு பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.இதில் இரண்டு பட்ஜெட்டுகள் 1952-ல் முதல் மக்களவை அமைப்பதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தேஷ்முக் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக 9 வது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற புதிய சாதனையை படைக்கிறார். இதை இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பெருமைக்குரிய தருணம் என்று பிரதமா் மோடி பாராட்டியுள்ளார்.
2019ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி, மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்திய சாதனையையும் படைத்தார்.
கடந்த 2024-ல் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து, தனக்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமரும் முன்னாள் நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய் தொடா்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை முறியடித்தார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்திலும் பிறகு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலத்திலும் நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தான் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
1959 ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் 1959 முதல்1964 வரை நிதியமைச்சராக இருந்த காலத்தில் மொத்தம் 6 பட்ஜெட்டுகளையும், பிறகு 1967 முதல் 1969 க்கு இடையில் 4 பட்ஜெட்டுகளையும் என மொத்தம் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
4 வெவ்வேறு காலகட்டங்களில் 8 ஆண்டுகள் நிதி அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அடுத்ததாக முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த காலத்தில் 8 முறை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இவர்கள் எல்லாம் வெவ்வேறு பிரதமர்களின் ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 1991 மற்றும் 1995 க்கு இடையில் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சிகாலத்தில் நிதியமைச்சராக இருந்தபோது தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
2019-ல், அடிமை இந்தியாவின் அடையாளமான ‘பட்ஜெட் பிரீஃப்கேஸை’ மாற்றி, சிவப்புத் துணியால் சுற்றப்பட்ட பாரம்பரிய இந்திய கணக்குப் பதிவேட்டை பயன்படுத்திய நிர்மலா சீதாராமன் 2021-ல், ஒரு டேப்லெட்டைப் பயன்படுத்தி முதல் காகிதமில்லா பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.
நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராகப் பதவியேற்ற நிா்மலா சீதாராமன், கொரொனோ பெருந்தொற்று பாதித்த காலத்திலும், உலகளாவிய புவிசார் அரசியல் தடுமாற்றங்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தி, தொடர்ந்து சிறந்த நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்து உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளார்.
















