திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரியே, வாகனத்தை கூட்டத்திற்குள் புகுத்தி நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருச்செந்தூரில் குவிந்தனர். கோவில் வளாகம், கடற்கரை மற்றும் கோவிலுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மக்கள் கடலாகக் காட்சியளித்தன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கூட்ட நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம், தனது வாகனத்தில் கோவிலின் நுழைவுவாயில் பகுதிக்குச் சென்றார்.
ஏடிஎஸ்பி வாகனம் உள்ளே நுழைந்த அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு காவல்துறை வாகனம் வந்தது. 2 வாகனங்களும் நகர முடியாமல் நின்றதால், அந்தப் பகுதியில் பக்தர்கள் செல்ல வழியின்றி கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மேலும்,கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் நிலைமையைச் சீர்செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாகனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
















