மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திங்கள்கிழமை கலந்துகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, இந்தியாவை சீனா ஆக்கிரமித்ததாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய புத்தகத்தில் உள்ளதைக் ராகுல் காந்தி குறிப்பிட்டுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, விவாதத்திற்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, தலைப்பின் கீழ் பேசும்படி அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை கூடியபோது, ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி காகிதங்களை கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதற்காக 374 -வது பிரிவின் கீழ் இந்த அமர்விலிருந்து 8 எம்பிக்களை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், மற்றும் டீன் குரியகோஸ் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
















