சேலம் ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மலையடிவார மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜருகுமலை, நாம மலை என பல்வேறு மலைகள் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கும் சேலம் மாவட்டத்தில், சமீப காலமாக மழை மற்றும் பனிப்பொழிவின தாக்கம் குறைந்து படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மலைப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து, செடி, கொடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதற்கிடையே, அங்குள்ள ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை விரைந்து அணைக்கும் பணியில் பொதுமக்களும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளை நோக்கி பரவும் அபாயம் உள்ளதால் மலையடிவார மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
















