தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மேட்டுப்பாளையம் அரசு பணிமனையில் பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கழகம் கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த சசிராஜ் என்பவர் திமுக தொழிற்சங்கத்தில் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
அதே போக்குவரத்து பணிமனையில் பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்ற மேலாளருக்கு சாதிய பாகுபாடுகள் காட்டி சசிராஜ் குடைச்சல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மேலாளரின் அறையை சாணி போட்டு மொழுகும் நடவடிக்கையில் சசிராஜ் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதனடிப்படையில், சசிராஜை சஸ்பெண்ட் செய்து கோவை மண்டல உதவி மேலாளர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சசிராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 5 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
















