இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ட்ரம்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்றும், இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியின் இந்த கடுமையான நிலைப்பாட்டால் தான் இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக ட்ரம்ப் குறைத்துள்ளது இந்தியாவின் ஆளுமையை வெளிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும்
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மீதான வரியை அறிவித்த அதிபர் ட்ரம்ப் அதை 90 நாட்களுக்கு நிறுத்திவைத்தார்.
பிறகு அதேமாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.
நான்கு நாட்கள் நடந்த போரில் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்திய-பாகிஸ்தான் போரை தாம் நிறுத்தியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை இந்தியா நிராகரித்த நிலையில் இருநாடுகளுக்குமான உறவில் விரிசல் விழுந்தது.
பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது 25 சதவீத வரியை விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது. தொடர்ந்து இந்திய மற்றும் ரஷ்ய பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்று இந்தியா தெரிவித்த நிலையில், இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையான விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ட்ரம்பின் ஆலோசகர்கள் உட்பட பல அமெரிக்க அரசியல் வல்லுநர்களும், இந்தியாவைப் பற்றி தரக்குறைவாக பேசியதோடு, இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த விமர்சனங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், பிரதமர் மோடி தனது ராஜதந்திர நடவ்டிக்கைகளில் கவனம் செலுத்திவந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடனும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியதைப் பார்த்து அமெரிக்கா கலக்கமடைந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது என்றும், தொழில் முதல் பாதுகாப்புதுறை என அனைத்து வகையிலும் இருதரப்பு மக்களுக்கும் இடையேயான 25 ஆண்டுகால நீடித்த நட்பும், உறவும் மேலும் முன்னேற்றமடைய உள்ளது என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.
இதை அப்படியே #USIndiaFWDforOurPeople என்ற ஹேஷ்டேக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை பதிவிட்டு இருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அதே செப்டம்பர் மாதத்தில் தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றதாக ப்ளூம்பெர்க் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாட்டுக்கு இந்தியாவை அவசரப்படுத்தவோ, நிர்பந்திக்கவோ முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய அஜித் தோவல், ட்ரம்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்கவும் இந்தியா தயாராகவே உள்ளது என்றும், அதே சமயம் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாகவும் உள்ளது என்றும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

மேலும் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களால் இந்தியாவை மிரட்டி பணியவைக்க முடியாது என்றும் கூறிய அஜித் தோவல் மார்கோ ரூபியோவிடம் கூறியதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு தான், அமெரிக்காவை இந்தியாவிடம் பணிய வைத்துள்ளது. மிரட்டிக் கொண்டிருந்த அதிபர் ட்ரம்ப் இறங்கி வந்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய கையோடு இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்தே அதே செப்டம்பர் 17 ஆம் தேதி, பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்த அதிபர் ட்ரம்ப், பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிறகு இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றன. இறுதியில், பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை விட குறைவான வரியை பெற்றதோடு, இந்திய வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர, பிரதமர் மோடியின் செய்தியை ட்ரம்புக்கு கன கச்சிதமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கொண்டு சேர்த்ததே சாத்தியமற்றதை சாத்தியமாகியுள்ளது.
















