ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆண்டின் தொடக்கமே தொடக்கமே இந்தியாவுக்கு வெற்றி செய்தியாகவே உள்ளது. முதலில் ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அடுத்த சில நாட்களிலேயே, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் விதிகளுக்கு ஏற்பவே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.
உலமெங்கும் தனது வர்த்தக உறவுகளை விரைவுபடுத்தி வரும் இந்தியா, தற்போது சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய ஆறு உறுப்பு நாடுகளைக் கொண்ட அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகள் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2004-ல் முதன்முதலில் ஜிசிசியுடன் தொடங்கப்பட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் 2011-ல் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2022-ல் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அறிவித்தன. 2023-ல் ஜிசிசி விதிமுறைகள் ஆவணத்தின் திருத்தப்பட்ட வரைவு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில், இப்போது ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஜிசிசி-யுடனான வர்த்தக ஒப்பந்தம் உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2021ம் ஆண்டு முதல் ஜிசிசி-இந்திய இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
2021-2022 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஜிசிசி-க்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 155 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இறக்குமதி 110.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 43.9 பில்லியன் டாலராகவும் இருந்தது.
அதற்கடுத்த ஆண்டு, இந்த வர்த்தக மதிப்பு சுமார் 185 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதில் இறக்குமதி 133.2 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 51.3 பில்லியன் டாலராகவும் இருந்தது.
அதற்கும் அடுத்த ஆண்டில், இந்த வர்த்தக மதிப்பு மீண்டும் உயர்ந்து 162 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த ஆண்டு, இது 179 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் இறக்குமதி 121.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 56.9 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகள் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், இந்த வர்த்தகம் இன்னும் பன்மடங்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கெனவே ஜிசிசி உறுப்பு நாடுகளுடன் தனித் தனியே இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கடந்த டிசம்பரில் ஓமனுடன் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் இந்தியா தொடங்கி இருப்பது, பாகிஸ்தானை ஜிசிசி உறுப்பு நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் யுக்தி என்றும் கூறப்படுகிறது
















