ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் உயரமான மலைப்பகுதியில் 20 மணி நேரத்திற்கும் மேலான கடும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
20 ஆண்டுகளாக தப்பித்து வந்த கொடூரமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கொல்லப்பட்டது எப்படி?
ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ், பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், உதம்பூர் மாவட்டத்தில் ஜோஃபர் வனப்பகுதியில் ‘கியா’ என்ற குறியீட்டுப் பெயரில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
கிஸ்ட்வார் பகுதியின் அடர்ந்த காடுகளிலும் கரடுமுரடான நிலப்பரப்பிலும் மறைந்திருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காகத் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் டிராஷி-I’ திட்டத்தின் கீழ் இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டுப் படைகள் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
ஜாஃபர், குஜ்ராடா மற்றும் சிக்லாபலோதா உட்பட அருகிலுள்ள வனப்பகுதிகளில் பல மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கிச் சூடு மற்றும் தொடர்ச்சியான வெடிச்சத்தங்கள் கேட்டன என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரும் கரடு முரடான மலையில் எளிதில் யாரும் நெருங்க முடியாத குகைக்குள் பதுங்கினார்கள். குகையின் நுழைவாயிலை வெடிவைத்துத் தகர்த்த பாதுகாப்புப் படையினர், பாராசூட் வீரர்கள் மற்றும் மோப்ப நாய்ப் படைகள் உட்பட ராணுவத் துணைப் படைகளுடன் குகையை முற்றுகையிட்டனர்.
கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் குகையையும் சுற்றியுள்ள வனப்பகுதியையும் கண்காணிப்பைத் தீவிரப் படுத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ராணுவ நடவடிக்கையில் கடந்த 18 மாதங்களாக சுமார் இருபது முறைக்கும் மேல் பிடிபடாமல் தப்பித்த வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கொடூரமான பயங்கரவாதி ஆதில் கொல்லப்பட்டுள்ளார்.
எம்4 கார்பைன் மற்றும் ஏகே ரக துப்பாக்கிகள் உட்பட பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குகைக்குள் இருந்து மீட்கப் பட்டுள்ளன.
ஆதிலின் வலது கரமாக செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் லஷ்கர் ஐ தொய்பா அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லாவையும் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவிய சைஃபுல்லா, கிஷ்வார் மற்றும் டோடா பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளார்.
மேலும் உள்ளூர் இளைஞர்களை மூளை சலவை செய்து, அம்மாநிலத்தில் பயங்கரவாத நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளார்.
இந்தப் பயங்கரவாதி சைஃபுல்லாவைப் பிடிக்க மூன்று தனித்தனி தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும், முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், மூன்று நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார்.
















