Supersonic வேக ஏவுகணை உதவியுடன் நீர்மூழ்கி குண்டை அதிவேகத்தில் வீசும் ஸ்மார்ட் (SMART) ஆயுத அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தானும், சீனாவும் நீண்ட காலமாகவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அடிக்கடி சீனா தனது கப்பல்களை அனுப்புகிறது.
இந்தியக் கடற்படையும், சீனகடற்படை கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, தக்க பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 2016ம் ஆண்டு நவம்பரில் ஸ்மார்ட் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. ஏவுதளத்திலிருந்து 50 முதல் 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ASW நடவடிக்கைகளுக்காக சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் கூடிய இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ அமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஸ்மார்ட் என்பது ஒரு ஏவுகணையுடன் நிரந்தரமாகக் கட்டப்பட்ட நீர்மூழ்கி குண்டு அல்ல. இது ஏவுகணை மூலம் செலுத்தப்படும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆயுதமாகும்.
இந்த கேனிஸ்டர் அடிப்படையிலான ஸ்மார்ட், ஒரு தரை மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்படுகிறது மற்றும் DRDO உருவாக்கிய TAL எனப்படும் டார்பிடோ அட்வான்ஸ்டு லைட்டைக் கொண்டுள்ளது. இது இப்போது பாராசூட் அடிப்படையிலான வீச்சுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
TALக்கு (Shyena) ஷையனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சமஸ்கிருத சொல்லின் அர்த்தம் பருந்து என்பதாகும்.
DRDL, RCI ஹைதராபாத் , ADRDE ஆக்ரா, NSTL விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல DRDO ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு துணை அமைப்புகளும் ஸ்மார்ட்டுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன.
2024ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் நீர்மூழ்கி குண்டை வீசும் ஸ்மார்ட் ஆயுத அமைப்பை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வழக்கமான டார்பிடோவின் வரம்புக்கு அப்பால் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேலும் விரிவுபடுத்துவதற்காகவே DRDO இந்த ஸ்மார்ட்டை உருவாக்கியுள்ளது.
இந்த ஏவுகணையின் முதல் சோதனை 2020ம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏவுகணை வரம்பு மற்றும் உயரம் வரை பறத்தல், மூக்கு கூம்பைப் பிரித்தல், டார்பிடோவை விடுவித்தல் மற்றும் வேகக் குறைப்பு பொறிமுறையை பயன்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக்கப் பட்டன.
நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம் அல்லது ஏவுகணையிலிருந்து பாதுகாப்பாகப் பிரிந்தவுடன், TAL , ஒரு பாராசூட்டின் உதவியுடன் கீழே இறங்குகிறது.
கடல் மேற்பரப்பை நெருங்கும் போது, அதன் டார்பிடோ வெளியீட்டு பொறிமுறை பாராசூட்டைப் பிரிக்கிறது. நீர்மூழ்கி குண்டு கடலில் விழுந்து இலக்கைத் தேடத் தொடங்குகிறது. நொடியில் இலக்கைத் துல்லியமாக அழிக்கிறது. மேலும், பல இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடிகிறது.
எதிரிகளுக்கு ஒரு கண நேரத்தைக் கூட கொடுப்பதில்லை என்பதே ஸ்மார்ட் (SMART) ஆயுத அமைப்பின் சிறப்பம்சமாகும்.
பாகிஸ்தான் மற்றும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களால் அது எங்கிருந்து வந்தது என்பதை உணரக்கூட முடியாது, அதற்குள் அவை சிதைந்து தூள் தூளாகிவிடும்.
அதிகளவில் கண்காணிப்பு செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் நிலைநிறுத்தும்போது, மேற்பரப்பு நீர்மூழ்கிக் கப்பல் அச்சுறுத்தல்களைக் கண்டறியும் திறன் மேலும் அதிகரிக்கும் என்றும் அதனால் SMART மேலும் பலம் மிக்கதாக மாறும் என்று கூறப் படுகிறது.
இந்தியப் பெருங்கடலை பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் கல்லறையாக மாற்றும் SMART ஆயுத அமைப்பு விரைவில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
















