ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மக்களவையில் ஏற்படும் அமளிகளுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களே காரணம் என்றும், ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறுவதை ராகுல் காந்தி விரும்பவில்லை என்றும் விமர்சித்தார். மக்களவையை செயல்பட எதிர்க்கட்சியினர் அனுமதிக்காத காரணத்தால், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் சரிவர நடைபெறவில்லை என்றும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார். பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டாம் என சபாநாயகர் கூறியது சரிதான் என குறிப்பிட்ட ரிஜிஜூ, பிரதமர் அவைக்கு வரும் போது அவரின் கைகளில் இருந்து காகிதங்களை பிடுங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக விமர்சித்தார். நாடாளுமன்றம் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை என்று காட்டமாக குறிப்பிட்ட ரிஜிஜூ, எதிர்க்கட்சியினர் விதிமீறி செயல்பட்ட போதிலும் மத்திய அரசு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
















