பிரான்சிடம் இருந்து கூடுதலாக 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எதனால் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…
பிரான்ஸ் நாட்டிடமிருந்து 114 ரபேல் போர் விமானங்களை 3.25 லட்சம் கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து நம் விமானப்படைக்காக, 36 ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டன. மேலும் இந்திய கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில், 26 ரபேல் – எம் விமானங்களை வாங்க கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருப்பது, தற்சார்பு தேசம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு பேரூதவியாக இருக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்தியா ரபேல் போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டுவதற்கு, அதன் நவீன தொழில்நுட்பம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. F4.1 மற்றும் F4.2 வெர்ஷன்களில் இடம்பிடித்திருக்கும் ரேடார் அமைப்புகள் TOP NOTCH TECHNOLOGY ஆல் வடிவமைக்கப்பட்டவை எனவும், விமானங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹெல்மெட்கள், அவர்களுக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் கண்முன்னே நிறுத்தும் எனவும் கூறப்படுகிறது.
2030-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் எஃப் 5 வெர்ஷனில், வீடியோ கேம் விளையாடுவது போன்ற ஓர் முக்கிய அம்சம் இடம்பிடிக்க உள்ளது. விமானிகள் பாதுகாப்பான இடங்களில் ரபேலை விமானத்தை நிலைநிறுத்திக்கொண்டு, அதில் இடம்பிடித்திருக்கும் ரோபோ ட்ரோன்களை ஏவி ஆபத்தான இடங்களில் தாக்குதலை நடத்த முடியும்.
ரபேல் போர் விமானத்தை ஓர் ஆகாய உளவாளி என்று சொன்னால் மிகையாகாது. எதிரி நாட்டு விமானத்தை பார்த்து விட்டால், அடுத்த நொடியே மற்ற ரபேல் விமானங்களுக்கும், பெருங்கடலில் சுற்றி வரும் போர்க்கப்ல்களுக்கும், தரைப்படைக்கும் தகவலை பகிர்ந்துவிடும். இது நமது முப்படைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு உதவியாக இருக்கும்.
இந்தியா தற்போது வாங்கும் 114 ரபேல் விமானங்களில் 12 முதல் 18 வரை மட்டுமே பிரான்ஸில் தயாரிக்கப்படுகிறது. மற்றவையெல்லாம், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கிறது.
இந்தியா கைவசம் வரும் ரபேல் விமானங்களில் ஒருவேளை பழுது ஏற்பட்டால், அதனை சரிபடுத்த பிரான்ஸை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலேயே பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் மையம் அமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
114 ரபேல் விமானங்களை வாங்க இந்தாண்டு துவக்கத்திலேயே முடிவெடுக்கப்பட்டாலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்தியா பயணத்தின், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மத்திய பாதுகாப்பு கொள்முதல் வாரியம் நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை விரைவில் வழங்க உள்ளது.
















