சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் வழங்க அதிமுக, திமுக போன்ற கட்சிகள் முன்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மேலும், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் தருவதாக ஏற்கனவே அதிமுக சார்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கிடையே தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டு வருகிறது
அதன்படி யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் செல்லலாம் என திட்டமிட்டுள்ள தேமுதிகவுக்கு இரு கட்சிகளின் முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதில் ஒரு சதவிகித வாக்குவங்கி கூட இல்லாத தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் வழங்க முடியும் என திமுகவும், அதிமுகவும் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் செய்வதறியாது திகைத்துள்ள தேமுதிக அடுத்தகட்ட நகர்வு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
















