வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்…
திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டாரங்களான காட்டுப்புத்தூர், சீனிவாசநல்லூர், உன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் விளையும் ‘கற்பூர வெற்றிலை’ அதன் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது கற்பூர வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக வெற்றிலை விற்பனை சரிந்துள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
வெற்றிலை சாகுபடிக்கான இடுபொருட்கள், உரம், மற்றும் வேலையாட்கள் கூலி எனச் செலவுகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. அதிகாலை முதல் கடும் உழைப்பை கொட்டி விளைவித்த வெற்றிலையைச் சந்தைக்குக் கொண்டு சென்றால், கட்டுப்படியாகாத விலையே கிடைக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டு வெற்றிலைக்குக் கிடைக்கும் விலை, அதை பறிப்பதற்கான கூலிக்கும் கூடப் போதுமானதாக இல்லை என நிலவரத்தை அவர்கள் கூறுகின்றனர்.
வெற்றிலை விலை வீழ்ச்சியால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வெற்றிலைக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் வெற்றிலை பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















