நிலக்கரி எரிவாயுவாக்கல் மற்றும் தூய்மை நிலக்கரி திட்டங்களுக்கு நிதியை பெறுவதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்பிக்கவில்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி புள்ளி விவரங்களுடன் விளக்கமளித்தார்.
அதில் தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 184 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுக்கு 6.42 மில்லியன் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு யூனிட் உற்பத்தி திறனுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிலக்கரி அளவு அதிகம் என்றும், தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் பங்கு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
எனவும் குறிப்பிட்டார். நிலக்கரி எரிவாயுவாக்கல் மற்றும் தூய்மை நிலக்கரி திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 1,500 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படவில்லை என்ற புகாரையும் மறுத்தார்.
எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி முன்கூட்டியே ஒதுக்கப்படுவதில்லை என்று கூறிய மத்திய அமைச்சர், இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற இதுவரை தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது அதன் முகமைகளிடமிருந்தோ எவ்வித விண்ணப்பமும் வரவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
















