அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டது போன்றே இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜியம் வரிச் சலுகை கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், அமெரிக்காவிலிருந்து மூலப்பொருட்களை வாங்கி ஆடை தயாரிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு பூஜ்ஜியம் வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இது இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஏற்றுமதி வரி 18 சதவீதமாக இருக்கும்போது, வங்கதேசம் வரியில்லாமல் ஏற்றுமதி செய்தால் இந்திய தொழில் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து நூல் மற்றும் பருத்தியை இறக்குமதி செய்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு வரி விதிக்கப்படாது என்று கூறினார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த அவர், இறுதி ஒப்பந்தத்தில் இதற்கான விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
















