சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, யானைகவுனியில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூட்டை உடைத்து சுமார் 10 கிலோ எடை கொண்ட 5 வெள்ளி கிரீடங்கள், மற்றும் சாமி சிலைகளின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிராம் எடை கொண்ட தங்கப்பட்டைகள் திருடப்பட்டன.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு நபர் முகமூடி அணிந்து திருடியதும், இதே போல தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 2 ஜெயின் கோயில்களில் நடைபெற்ற திருட்டிலும் அதே நபர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலத்தில் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்ததோடு மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பதுங்கியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அங்கே விரைந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஜீவன்சிங் மற்றும் அவர் திருடிய ஆபரணங்களை வாங்கிய ராஜ்பவு ரத்தோர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஜீவன்சிங், சேலம், செங்கல்பட்டு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
















