வைகை ஆற்றின் எந்த பகுதியிலும் மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்கு மணல் அள்ளுவதாக கூறி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டிய வைகை ராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில் மணல் கொள்ளை தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாலப் பணிகளை நிறுத்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் வைகை ராஜன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு வைகை ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் மணல் அள்ள தடை விதித்தனர்.
மேலும் மனுதாரரின் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















