திருச்சி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காரைக்காலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவு திருச்சி வந்தார். அமித்ஷா உடன் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, எல் முருகன் ஆகியோரும் திருச்சி வந்தனர்.
அவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக நிர்வாகிகள் கே.பி.ராமலிங்கம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் , பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் கார் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு வழிநெடுகிலும் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு காரில் விமான நிலையம் செல்லும் அமித் ஷா,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பின்னர் புதுச்சேரி மாநில பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அமித்ஷா, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம், புதுக்கோட் சாலை மற்றும் அவர் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான NDA கூட்டணியின் தேர்தல் பணிகளை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த இந்தியாவின் அரசியல் சாணக்கியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமித்ஷாவின் வருகையும், காரைக்காலில் அவர் பங்கேற்கவுள்ள நிகழ்வுகளும், மீண்டும் புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி அமைவதை உறுதிப்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
















