2016 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கி கவுரவித்தார்.
2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில், அவை அனைத்தும் ஒரே மேடையில் வழங்கப்பட்டன.
அதன்படி, சிறந்த படங்களாக தேர்வான மாநகரம், அறம், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி போன்ற படங்களுக்கும், சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. மேலும், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளுக்கான விருதுகளை பெற்றனர்.
இவர்கள் அனைவருக்கும் ஒரு சவரன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக 2 லட்சமும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சமும், மூன்றாம் பரிசாக 75 ஆயிரமும் வழங்கப்பட்டது.
















