எல்லையில் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் அதிரித்துவரும் நிலையில், இந்திய விமானப்படையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் முடிவுக்கு மத்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
(Rafale) ரஃபேல் – உலகின் சிறந்த அதிநவீன போர் விமானங்களில் ஒன்றாகும். பிரான்ஸின் Dassault Aviation நிறுவனத்தின் (Rafale) ரஃபேல் போர்விமானம் ஒரு பன்முகப் போர் விமானமாகும்.
மணிக்கு 2,223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட ரஃபேல் போர்விமானம்,வழக்கமான ஏவுகணைகளுடன் அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாகும்.

ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் Rafale ரஃபேல் போர் விமானத்தின் வல்லமையை, இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் உலகமே கண்டு வியந்தது.
வரும் 17ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக 3.25 லட்சம் கோடி ரூபாய் செலவில் 114 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
18 ரஃபேல் போர் விமானங்களை Dassault நிறுவனத்திடமிருந்து நேரடியாகவும், மீதமுள்ள 96 Rafale ரபேல் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்கள் வர உள்ளன.
இந்த ஒப்புதல் மூலம் இந்தியாவிடம் உள்ள மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 150 ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்திய விமானப்படையில் 13 படைப்பிரிவுகளில் சுகோய்-30MKI போர் விமானங்களும், இரண்டு ரஃபேல் படைப்பிரிவுகளும், மிராஜ் 2000 மற்றும் MiG-29 வகையில் மூன்று படைப்பிரிவுகளும், தேஜஸ் Mk1 வகையில் இரண்டு படைப்பிரிவுகளும் மற்றும் ஆறு ஜாகுவார் படைப்பிரிவுகளும் உள்ளன.
பொதுவாக 16 முதல் 18 போர் விமானங்களை இயக்கும் ஒவ்வொரு படைப்பிரிவும் இனி ரஃபேல் போர் விமானங்களை இயக்கும் என்று கூறப்படுகிறது.

114 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதால் இந்திய விமானப்படையில் ஆறு புதிய படைப்பிரிவுகள் உருவாகும் என்றும், இது நாடு முழுவதும் அந்த எண்ணிக்கை மொத்தம் எட்டு ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது ரஃபேல் மற்றும் உள்நாட்டு போர் விமானங்களின் ஒருங்கிணைப்பு என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட LCA Mk1A என்ற போர் விமானங்கள் அடங்கிய 10 படைப்பிரிவுகளும், Mk2 என்ற போர் விமானங்கள் அடங்கிய 7 படைப்பிரிவுகளும் மற்றும் AMCA என்ற ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்கள் கொண்ட 7 படைப்பிரிவுகளும் உள்ளடக்கிய மொத்த படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதாவது செயல்பாட்டில் உள்ள படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 29 இருந்து 50 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சீனாவின் J-20 போர் விமானங்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியா ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்துள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் வலிமையான விமானப்படைகளில் முதலிடத்தில் இந்தியா இருக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்துடன், அமெரிக்காவிலிருந்து கூடுதலாக ஆறு போஸிடான் 8I (P-8I) கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
















