ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ள நிலையில், தவளையின் உடலில் சுரக்கும் விஷத்தின் மூலம் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது எவ்வளவு கொடியது என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அலெக்ஸி நவால்னி… இவர் ரஷ்ய அதிபர் புதின் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். புதின் மிகப்பெரிய ஊழல்வாதி என்றும் முழங்கி வந்தவர், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தார்… 2020ம் ஆண்டு நவால்னியை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், ஜெர்மனியில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பிப்ரவரி மாதத்தில், ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சுருண்டு விழுந்து நவால்னி உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியது. தனது கணவர் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
இந்த சூழலில்தான் அலெக்ஸி நவால்னியை கொல்ல ரஷ்யா, கொடிய விஷம் கொண்ட டார்ட் தவளையை பயன்படுத்தியதாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் கூட்டறிக்கை மூலம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
அதன்படி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரை கொலை செய்ய பயன்படுத்திய தவளையின் விஷம் அவ்வளவு கொடியதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தவளையின் விஷமான neurotoxin, morphine-ஐ விட அதிக சக்திவாய்ந்தது கருதப்படுகிறது. இதை ஒருவரது உடலில் செலுத்தப்பட்டால், தசை இழுப்பு, வலிப்பு, இதயத் துடிப்பு குறைதல், சுவாச கோளாறு போன்றவை ஏற்பட்டு இறுதியில் மரணத்தை ஏற்படுத்திவிடும்…
நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வுகள், தென் அமெரிக்காவில் உள்ள விஷ டார்ட் தவளைகளில் காணப்படும் epibatidine என்ற நச்சுப்பொருள் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளதாக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவால்னி இயற்கையான காரணங்கள் இறந்ததாக ரஷ்யா கூறியிருந்தாலும், அவர் சிறையில் இருந்தபோது விஷத்தை கொடுப்பதற்கான வழி, நோக்கம் மற்றும் வாய்ப்பு இருந்ததாக அந்த நாடுகள் கூறியுள்ளன. இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், நவால்னியின் எதிர்ப்பிற்கு பயந்து இந்த கொடிய விஷத்தை பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
சரி எபிபடிடின், டார்ட் தவளை விஷம் என்றால் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.. தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் டார்ட் தவளைகள் உடலில் இருந்து எடுக்கப்படும் எபிபடிடின்தான் இந்த நியூரோ டாக்சின் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக மழைக்காடுகளில் வாழும் சிறிய, பிரகாசமான நிறமுள்ள தவளைகளின் தோலில் மட்டுமே நியூரோடாக்சின் உற்பத்தியாகின்றன என்பதும், ஒருவேளை அவை மனிதர்களால் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டால் எபிபடிடைனை உருவாக்கும் திறன் இருக்காது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த எபிபடிடின், மார்பினை விட 200 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்று நச்சுயியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவளைகளின் தோலில் இயற்கையாகக் காணப்படுவதைத் தவிர, இந்த நியூரோடாக்சின் ஒரு ஆய்வகத்திலும் தயாரிக்கப்படலாம், நவல்னியிடம் பயன்படுத்தப்பட்ட பொருளில் இது நிகழ்ந்திருக்கலாம் என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
எபிபடிடைன் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் தீவிர நச்சுத்தன்மை காரணமாக, உலகம் முழுவதும் மருத்துவ பயன்பாட்டிற்கு இது ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை.
நவால்னி கொடிய விஷத்தை வைத்து கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒரு தவளை பற்றிய முட்டாள்தனமாக அறிக்கையை யாரும் நம்பப்போவதில்லை எனறு கூறியுள்ளது.
மேலும் இதுபோன்ற கூற்றுகள் மேற்கத்திய பிரச்சனைகளில் இருநது திசைதிருப்பும் பிரச்சாரம் என்றும் எதிர்வினையாற்றியுள்ளது.
















