டி20 உலகக் கோப்பை போட்டிகளை வங்கதேசம் புறக்கணித்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்த ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேசம் தங்கள் போட்டிகளை வேறு நாட்டில் வைக்குமாறு கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததையடுத்து, டி 20 உலக கோப்பை போட்டியை வங்கதேசம் புறக்கணிப்பதாக அறிவித்தது. வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் சேர்க்கப்பட்டது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தானும் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்து,போட்டியில் பங்கேற்க சில நிபந்தனைகளையும் விதித்தது.
பிறகு வருமானப் பங்கில் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால், தனது நாட்டு அணியை டி 20 உலக கோப்பை போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டார். இலங்கையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் வங்கதேசத்தின் புதிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அமினுல் ஹக் பதவியேற்ற உடனேயே, இந்திய துணை உயர் ஆணையரைச் சந்தித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சரிசெய்ய வங்கதேசம் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், டி 20 உலக கோப்பை போட்டியைப் புறக்கணிக்கும் வங்க தேசத்தின் முடிவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் பங்கு இருந்தது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் அணியில் இருந்து நீக்கிய பிறகும், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வங்கதேசம் தயாராகவே இருந்ததாக தெரிவித்த அந்த அதிகாரி, ஐசிசியின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், திடீரென வங்கதேசம் தனது புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான சையத் அஷ்ரபுல் ஹக், வாரியத்தின் தலைவர் அமினுல் இஸ்லாமை, நக்வி தவறாக வழிநடத்தியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசை திருப்திப்படுத்துவதில் மட்டுமே BCB தலைவர் அமினுல் இஸ்லாம் கவனம் செலுத்தியதாக விமர்சித்த ஹக், அவர் பாகிஸ்தானின் பொறியில் சிக்கியதாகவும் கூறியுள்ளார்.
கூடுதலாக முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலின் வழிகாட்டுதலின் படியே வங்கதேசம் உலகக் கோப்பை போட்டிகளைப் புறக்கணித்தது என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் முறையாக கோரிக்கை வைத்திருந்தால், இரு அமைப்புகளும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கவலைகளை நிவர்த்தி செய்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டி 20 உலக கோப்பையைப் புறக்கணிப்பது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கும் செய்யும் அநீதியாகும் என்று கூறிய ஹக் , வங்கதேசத்துக்கே இது ஏமாற்றமாகவும் அவமானமாகவும் உள்ளது என்று வருத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலின் தவறான வழிகாட்டுதல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வியின் அழுத்தம் ஆகியவற்றால் வாங்க தேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் அமினுல் இஸ்லாம் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்குத் துரோகம் செய்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்களும் கூறுகின்றனர்.
















