திமுக அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணிநியமனம், பணியிட மாற்றம் மற்றும் ஒப்பந்தப்பணிகளில் நடைபெற்றிருக்கும் மெகா ஊழல் மற்றும் முறைகேடுகள் அமலாக்கத்துறை கடிதத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதம் குறித்தும் அதில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்
888 கோடி ரூபாய்….
1020 கோடி ரூபாய்…..
365 கோடி ரூபாய்….
இவை எல்லாம் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி அல்ல. திமுக அமைச்சர் கே.என்.நேரு கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணிநியமனம் செய்யப்படுவதற்கும், ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலமும் சேர்க்கப்பட்ட தொகை தான் இவை.
கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணிநியமனம் செய்வதற்கு 888 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் தமிழக காவல்துறை தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 1020 கோடி ரூபாய், 365 கோடி ரூபாய் என ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய கடிதத்தை அனுப்பி கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கூறியது. ஆனால் அமலாக்கத்துறையின் கடிதத்தை பொருட்படுத்தாமல் வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்தி வந்த நிலையில், அது தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையில் அமைச்சர் கே. என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை காவல்துறைக்கு அனுப்பிய கடிதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கசிந்துவரும் நிலையில் அதில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் பெரும் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி தமிழக காவல்துறைக்கும், தலைமைச் செயலாளருக்கும் அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் பணிநியமனம் மற்றும் பணியிட மாற்றத்திற்காக 7 லட்சம் முதல் 1 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவின் உறவினர்கள் மற்றும் நெருக்கமான தனிநபர்களின் மூலம் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அவர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ் அப் தரவுகளில் இருந்து 340 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கான பணிநியமன மற்றும் பணியிட மாற்றங்களுக்கு பெருமளவில் லஞ்ச பணம் கைமாறியிருப்பது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவி பிரசாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்ணன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 365 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
லஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் 223 கோடி ரூபாய் கட்டுமானம் மற்றும் நிலம் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 44 கோடி ரூபாய் அளவிற்கான பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், 2.5 கோடி ரூபாய்க்கு தங்கக் கட்டிகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதோடு லஞ்சமாக பெறப்பட்டிருக்கும் பணத்தில் 10 சதவிகிதம் வரை திமுகவின் கட்சி வளர்ச்சி நிதிக்காகவும் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதற்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகளும் இடைத்தரகர்களாக செயல்பட்டிருப்பதும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கும் நிலையில், அரசின் மற்ற துறைகளில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை விரிவடையும் பட்சத்தில் கே.நேரு மட்டுமல்லாமல் அவருடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















