தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் விளக்கி தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட் கார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துறைவாரியாக திமுக அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காட்டும் தமிழக பாஜகவின் ரிப்போர்ட் கார்டு குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. அந்த வாக்குறுதிகளில் 75 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம், 80 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம் என அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு சதவிகித்தை கூறிவந்த நிலையில், அவர்களுக்கெல்லாம் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டோம் என தெரிவித்திருக்கிறார். கல்வி மற்றும் விவசாயக் கடன் தொடங்கி நீட் தேர்வு வரை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்திருக்கும் மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலினின் பேட்டி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தமிழக பாஜக விரிவான விளக்க அறிக்கையை தொகுத்து வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியின் மதிப்பெண் அட்டை எனும் பெயரில் தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் அந்த ரிப்போர்ட் கார்டின் படி 31 சதவிகித வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி திமுக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. ஆட்சி மற்றும் நிர்வாகம், உட்கட்டமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக நீதி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் பொதுமக்களின் என பெரும்பாலான துறைகளில் திமுக ஆட்சியின் நிர்வாகம் படுதோல்வியை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, விலைவாசி, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம், மத நல்லிணக்கம், சமூகநீதி, ஊழல் ஆகிய பத்து பிரிவுகளில் ஒன்பது பிரிவுகளில் தோல்வியடைந்திருக்கும் திமுக, ஊழல் என்ற ஒரு பிரிவில் மட்டும் வெற்றி பெற்றிருப்பதாகவும் பாஜக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில சுயாட்சி பெறுவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்தும் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை அமைத்து அக் குழுவின் முதல் பாகத்தை அண்மையில் வெளியிட்ட திமுக அரசு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முதல் வாக்குறுதியான மாநில உரிமைகளை அடகு வைத்திருப்பது தான் மிச்சம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பொய்யான, சாத்தியமில்லாத, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அடுத்து வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு தேர்தல் வாக்குறுதியை தயாரித்து வரும் நிலையில், தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் இந்த ரிப்போர்ட் கார்டு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதன் மூலம் சாதனைகள் எனும் பெயரில் பிரம்மாண்ட நிகழ்வுகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டு மக்களை மீண்டும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற திமுகவின் கனவு தகர்ந்திருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
















