நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி
ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த இக்பால் கான் என்பவர், கடந்த ஆண்டு லீசுக்கு வீடு தேடி வந்தார். அப்போது, ஊட்டி நொண்டிமேட்டை சேர்ந்த ஷாயின்ஷா என்பவர் இடைத்தரகர் மூலம் அறிமுகமாகி, லீசுக்கு வீடு வாங்கி தருவதாக இக்பால் கானிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய இக்பால் கான், அவரிடம் ஐந்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அவர் வீடு வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த இக்பால் கான், ஷாயின்ஷாவை பலமுறை சந்தித்து பணத்தை கேட்டபோது, சுமார் இரண்டேகால் லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில், ஷாயின்ஷா, ஒரே வீட்டை காட்டி பலரிடம் இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இந்த மோசடி குறித்து ஊட்டி மத்திய காவல்நிலையத்தில் இக்பால் கான் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஷாயின்ஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















