மதுரையில் திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் தமிழகத்தில் போதை பொருளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சியின் இளைஞரணித் தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது மேடையில் பேசிய எஸ்.ஜி. சூர்யா, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும், போதைப் பொருள் புழக்கம் குறித்து யாராவது புகார் அளித்தால், அவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்படும் அவலநிலை நீடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி இல்லாதவர் என்று கூறி, அவரது புகைப்படத்தை பாஜக நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.
















