கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, நேரில் ஆஜராகி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.
அவரை குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில் நிலங்களை பாதுகாக்கத் தவறிய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் கோயில் நிலங்களும், சொத்துகளும் பறிபோயிருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள்,
அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் பணிக்கு துரோகம் செய்வதாகவும் காட்டமாக பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கோயில் சொத்துகளை பாதுகாக்கத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன்,
ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இழப்பை, ஆக்கிரமிப்பாளர்களிடம் ஈடுசெய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
















