கோவை அருகே வீடு வீடாக சென்று மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை சூலூர் அருகே மோப்பிரிபாளையம், பேரூராட்சி, வாகராயம்பாளையம், அம்மன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் 2 பெண்கள் கைகளில் துண்டுப் பிரசுரங்களுடன் நுழைந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசி, பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பெண்களை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
“எங்கள் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து ஏன் மதப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெண்கள் அளித்த பதிலால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அவர்களை உடனடியாகப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறினர்.
பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள், “இனி இந்தப் பகுதிக்குள் மதப் பிரச்சாரத்திற்காக வரக்கூடாது” என எச்சரித்து விரட்டியடித்தனர்.
















