தவெக மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும், அதை திருப்பித் தரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தவெக சார்பில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு, கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.
விருப்ப மனு வினியோகம் துவங்கிய முதல் நாளில், ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் மனுக்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. விருப்ப மனு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அவற்றை நிரப்பி திருப்பி ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் மாவட்டச் செயலர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போக, சுமார் 80 தொகுதிகளுக்கு கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.
இதனால் தவெக வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற யாரும் மனுக்களை அளிக்கக் கூடாது என, மனுக்களை வாங்கிய நிர்வாகிகளை, மாவட்டச் செயலர்கள் மிரட்டியுள்ளதாகவும் மீறி மனுக்களை வழங்கினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















