இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேபி பிரம்மோஸ் என்று அழைக்கப்படும் பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டம் என்ற ஏவுகணை தளத்தைக் கொள்முதல் செய்ய பிரான்ஸ், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நிலையை மாற்றியமைத்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் அதிரடி தாக்குதல்களைக் கண்டு உலகமே வியந்தது.
குறிப்பாக, சீனா மற்றும் துருக்கியில் இருந்து வாங்கி பாகிஸ்தான் பயன்படுத்திய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானிலே இடைமறித்து அழித்து தனது இராணுவ வலிமையை இந்தியா உலகத்துக்கு காட்டியது.
இந்நிலையில் இந்தியாவின் பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டத்தை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பினாகா மல்டிபிள் ராக்கெட் லாஞ்ச் சிஸ்டம் என்பது நீண்ட தூர பீரங்கி ஆயுதமாகும். பினாகா என்பது ஒரு வழிகாட்டப்பட்ட திட-எரிபொருள் ஏவுகணையாகும். இது விரைவாக அதேநேரம் அதிக ஆற்றலுடன் சுடும் சக்தியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன ராக்கெட் லாஞ்ச் சிஸ்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO உருவாக்கியுள்ளது.
பேராற்றல் மற்றும் துல்லியத்தைக் குறிக்கும் சிவபெருமானின் வில்லான பினாகா என்று பெயரிடப் பட்டுள்ள பினாகா MK I மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர், 40 கிலோ மீட்டர் வரம்பு கொண்டதாகும். அடுத்து உருவாக்கப்பட்ட பினாகா MK II 90 கிலோமீட்டர் வரம்பு கொண்டதாகும்.
மேம்படுத்தப்பட்ட பினாகா MK III 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழிக்கும் திறன் கொண்டதாகும்.
இது 250 கிலோ எடையுள்ள ஏவுகணைகளைச் சுமந்து சென்று எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழிக்கும் திறன் கொண்டதாகும்.
ஏற்கெனவே உள்ள பினாகா ஏவுகணை தளத்தில் இருந்தே பினாகா MK III யை ஏவ முடியும் என்பதால் கூடுதல் செலவுகள் இல்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு ஏவுகணையும் 8 வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளைச் சுமந்து சென்று 700க்கு 500 மீட்டர் கொண்ட பரப்பளவை 44 வினாடிகளில் அழிக்கும் திறன் கொண்டதாகும்.
அதாவது பினாகா ராக்கெட் லாஞ்சர் 44 வினாடிகளில் ஒரே நேரத்தில் 72 ராக்கெட்டுகளை வெவ்வேறு இலக்குகளைக் குறிவைத்து ஏவும் ஆற்றல் கொண்டதாகும்.
ஜிபிஎஸ் வசதியுடன் ஏற்கனவே ஒரு வழிகாட்டப்பட்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ள இந்த பினாகா ஏவுகணைகள் மணிக்கு 5,800 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து தாக்குதல் நடத்துவதால், பினகாவை இடைமறித்து அழிப்பது சாத்தியமே இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் எதிரி நாட்டு பீரங்கிகள், எதிரியின் விமானப் படை தளங்கள் மற்றும் எதிரியின் ராணுவத் துருப்புகளின் நிலைக் களங்களைத் தாக்கி அழிப்பதற்கு பினாகா சிறந்த ஆயுதமாக உள்ளது.
பினாகாவை ஒரு “துல்லியமான ஷாட்கன் ஷெல்” என்று கூறினால் பிரம்மோஸ் ஒரு “சூப்பர்சோனிக் ஸ்னைப்பர் ரைபிள்” ஆகும்.
மேலும், பிரமோஸுக்கும் பினாகாவுக்கும் இடையே உற்பத்தி செலவில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு பிரம்மோஸ் ஏவுகணையின் விலை சுமார் 40 கோடி ரூபாயாகும். அதே நேரத்தில் ஒரு பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டத்தின் விலை வெறும் 2.3 கோடி ரூபாய் மட்டுமே.
பினாகாவின் ஆற்றல் மற்றும் துல்லியம் மட்டுமில்லாமல் இந்தக் குறைந்த விலையே சர்வதேச நாடுகளுக்கு பினாகாவை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
பிரான்சிடமிருந்து சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
அதே நேரத்தில், 2027ம் ஆண்டுக்குள் ஓய்வு பெறவிருக்கும் அமெரிக்காவின் M270 LANCE ராக்கெட் அமைப்புக்கு மாற்றாக இந்தியாவின் பினாகா ராக்கெட் அமைப்பை வாங்க பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















